Tuesday, June 3, 2014

கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி!

உண்மையில் இளையராஜா பிறந்தது ஜூன் 3-ம் தேதிதான். இதே தேதியில்தான் கருணாநிதியின் பிறந்த நாளும் வருகிறது. முன்பெல்லாம் இளையராஜா தன் பிறந்த நாளை பொதுவில் கொண்டாடாமல் இருந்தார்.

 அந்த நாளில் அவர் திருவண்ணாமலையிலோ அல்லது மூகாம்பிகைக் கோயிலிலோ இருப்பார். ஆனால் திரையுலகினரும் அவரது நண்பர்களும் அவர் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியபோது அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனையுடன். அப்போது கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த நேரம். அவருக்கும் ஜூன் 3-ம் தேதிதான் பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட வேண்டாம் என்ற நோக்கில் தன் பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாடிவிடலாம் என்ற யோசனை சொன்னார் இளையராஜா.

அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஒரு நாள் முன்பே தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இளையராஜா. கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த வழக்கத்தை அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை. கடந்த ஆண்டு பிறந்த நாளன்று இதுபற்றி இளையராஜா கூறியதை இங்கே தருகிறோம்: "உண்மையில் இன்று எனக்குப் பிறந்த நாள் கிடையாது.

 ஒரு நாள் முன்கூட்டியே கொண்டாடுகிறேன். ஜூன் 3-ம் தேதிதான் எனக்குப் பிறந்த நாள். ஆனால் அன்று முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் வருகிறது. அந்த தினத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாமே என்பதற்காகத்தான் நான் ஒரு நாள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவேன். இந்த முறை உங்கள் அன்பு இங்கே இருக்கும்படி ஆகிவிட்டது!"


1 comments:

  1. ஒரு அரசியல் தலைவருக்காக தனது பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாடும் இசைஞானியின் செய்கை அபத்தமானது .

    ReplyDelete