Sunday, May 25, 2014

அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன்..!

தமிழ்த்திரை உலகப் பின்னணிப் பாடகர்களில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர், டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் அவர்கள் குரலின் சாயலில் அற்புதமாக பாடி இவர் சாதனை படைத்தார். 

'டி.எம்.எஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை. தந்தை மீனாட்சி அய்யங்கார். தாயார் வெங்கடம்மாள். சவுந்தர்ராஜனுக்கு சிறு வயது முதலே பாடுவதிலும், நடிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. 

சினிமாவில் எப்படியாவது நடித்து பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாய்ப்பு கேட்டு, பல படக்கம்பெனிகளுக்குச் சென்றார். அவருடைய விடா முயற்சியால் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

1951-ம் ஆண்டு ராயல் டாக்கீஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ‘சுதர்சன்' என்ற படத்தை எடுத்தனர். பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா நடித்த இப்படத்தில் பி.பி.ரங்காச்சாரி சாமியாராக நடித்தார். அவருக்கு சீடராக டி.எம்.சவுந்தரராஜன் நடித்தார். தொடர்ந்து 'கிருஷ்ணவிஜயம்', 'தேவகி' ஆகிய படங்களில் சிறு வேடங்களில் தோன்றியதோடு, சில பாடல்களையும் பாடினார்.

எம்.கே.தியாகராஜ பாகவதரைப் போன்ற இனிய குரல் சவுந்தரராஜனுக்கு இருந்தது. 'உள்ளம் உருகுதய்யா, முருகா!' என்ற பாடலை டி.எம்.எஸ். இசை அமைத்துப்பாட, அது இசைத்தட்டாக வெளிவந்தது. பட்டி, தொட்டி எங்கும் ஒலித்த இப்பாடலைக் கேட்டவர்கள், அது பாகவதர் பாடல் என்றே எண்ணினார்கள். 

ஒரு முறை பழனிக்கு பாகவதர் பாட சென்றபோது, அங்கு டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாட்டு ஒலிபெருக்கியில் ஒலித்தது. இந்த பாடலைக் கேட்ட பாகவதர், சவுந்தரராஜனின் குரலில் மனம் மகிழ்ந்து, அவரைக் காண விரும்பினார். 

வேறொரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தனர். அப்போது, 'உங்கள் குரல் அமிர்தமாக இருக்கிறது. ரொம்ப சந்தோஷம். எதிர்காலத்தில் பெரும் புகழ் அடைவீர்கள்' என்று சவுந்தரராஜனை பாகவதர் வாழ்த்தினார். 

1950-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த ‘மந்திரிகுமாரி' படத்தில் டி.எம்.சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் 'அன்னமிட்ட வீட்டிலே' என்ற பாடலை பாடினார்.

தொடர்ந்து ,1954-ம் ஆண்டு 'மலைக்கள்ளன்' படத்தில் எம்.ஜி.ஆருக்காக சவுந்தரராஜன் பாடினார்.   பானுமதியை குதிரையில் வைத்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும்போது பாடப்படும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடலை மிகவும் அற்புதமாக சவுந்தரராஜன் பாடினார். 

எம்.ஜி.ஆருக்கு டி.எம்.சவுந்தரராஜனின் குரல் கனகச்சிதமாக பொருந்தி இருந்தது. இதே ஆண்டில், 'தூக்குத்தூக்கி' படத்தில் சிவாஜிகணேசனுக்காக பாடினார். டி.எம்.எஸ். குரல், சிவாஜிகணேசனுக்கு ரொம்பவும் பொருத்தமாக அமைந்தது. அனைத்து பாடல்களும் `ஹிட்' ஆயின. 

1954-ம் ஆண்டு, டி.எம்.எஸ். வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. திரை உலகின் இரு இமயங்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் டி.எம்.எஸ். குரலே பொருத்தமானது என்று திரை உலகத்தினரும், ரசிகர்களும் ஏகமனதாக கருதினர். 

இதன் காரணமாக, எம்.ஜி.ஆர். படங்களுக்கும், சிவாஜி படங்களுக்கும் அவர் தொடர்ந்து பாடினார். இதுபற்றி சவுந்தரராஜன் கூறும்போது, 'சிவாஜிக்கு பாடவேண்டும் என்றால் அடிவயிற்றில் இருந்து குரல் எடுத்து பாடுவேன். எம்.ஜி.ஆருக்கு பாடும்போது அடித்தொண்டையிலும், மூக்கிலும் சாரீரத்தை வரவழைத்து பாடுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், அசோகன், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அந்தக் காலகட்டத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் டி.எம்.சவுந்தரராஜன் குரல் கொடுத்துள்ளார். 

குறிப்பாக 'தூங்காதே தம்பி தூங்காதே', 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்', 'எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி', 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்', 'யாருக்காக இது யாருக்காக', 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' போன்ற ஏராளமான பாடல்கள் காலத்தை வென்று நிற்கும் பாடல்களாகும். 

1962-ம் ஆண்டு இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் சொந்தமாகத் தயாரித்த 'பட்டினத்தார்' படத்தில் சவுந்தரராஜன் கதாநாயகனாக நடித்தார். இதில் எம்.ஆர்.ராதா, லீலாவதி ஆகியோர் நடித்தனர். படத்தை சோமு இயக்கினார். இசை: ஜி.ராமநாதன். 

சவுந்தரராஜன் பட்டினத்தாராக கச்சிதமாக நடித்து இருந்தார். அதில் அவர் பாடிய பாடல்களும் மிகவும் அருமையாக இருந்தன. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 'பட்டினத்தார்', ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றி வாகை சூடியது. 

அதனைத் தொடர்ந்து 1964-ம் ஆண்டு 'அருணகிரிநாதர்' படத்தில் சவுந்தரராஜன் கதாநாயகனாக நடித்தார். 'பட்டினத்தார்' போலவே இதுவும் வெற்றிப்படம். இப்படத்தில் இடம் பெறும் 'முத்தைத் திருநகையத்திச் சரவண...' என்ற கடினமான பாடலை, இனிமையாகப் பாடியிருந்தார். 

அதேபோல 'கவிராய காளமேகம்' என்ற படத்திலும், சொந்த தயாரிப்பில் 'கல்லும் கனியாகும்' படத்திலும் டி.எம்.எஸ். நடித்தார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.

தமிழ்ப்பட உலகில் பெரும் திருப்புமுனை உண்டாக்கிய 'ஒருதலை ராகம்' படத்தில் இவர் பாடிய பாடல்கள் அற்புதமானவை. இதுதவிர, ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களையும், நூற்றுக் கணக்கான மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ள டி.எம்.எஸ்., தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான மேடைக் கசேரிகளையும் நிகழ்த்தியுள்ளார்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜனின் குரலில் பதிவான கடைசி பாடல், 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1974 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கியது. மத்திய அரசு இவருக்கு, ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கிப் பாராட்டியது. தமிழ் திரைப்பட உலகின் தன்னிகரற்ற பின்னணி பாடகராக திகழ்ந்த டி.எம்.சவுந்தர்ராஜன் உடல் நலக்குறைவு காரணமாக 25-5-2013 அன்று சென்னையில் மரணம் அடைந்தார்.

காலத்தால் அழிக்க முடியாத குரல் வளத்தை தனது பாடல்களின் மூலம் நமக்காக விட்டு சென்றுள்ள டி.எம்.சவுந்தர்ராஜனின் உடலுக்கு திரை உலகத்தினர் மட்டுமின்றி, ஏராளமான அவரது ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

சுமார் 50 ஆண்டுகள் தமிழ்த் திரைப்படத்துறையில் கோலோச்சி, அவர் பாடியுள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களில் பெரும்பாலானவை காற்றுள்ளவரை மக்களின் காதுகளில் தேனீயின் இனிய ரீங்காரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.

மறைந்த மேஜர் முகுந்தன் குழந்தையுடன் விஜய்..!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்தனின் உடல் 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் வகையில் இளைய தளபதி விஜய் முகுந்தனின் மனைவியையும், அவர்களது 3 வயது குழந்தை அர்ஷயாவையும் சந்தித்துள்ளார்.

வீர மரணமடைந்த முகுந்தனின் 3 வயது குழந்தை அர்ஷயாவோடு விஜய் விளையாடி நேரம் கழித்துள்ளார்.

மேலும் இதன் புகைப்படம் சமூக வளைதளங்களில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நூற்றெட்டின்(108) மகத்துவம்!

இந்து மத குருமார்களும், பெரியவர்களும் இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்ய நூற்றெட்டு மணிகள் கொண்ட ஜப மாலை பயன்படுத்துவது எல்லோருக்கும் தெரிந்ததே. காரணம், இந்துத் தெய்வங்களை அர்ச்சிக்கும் அஷ்டோத்திரங்கள் நூற்றெட்டு. இந்து மதத்தில் மட்டுமின்றி உலகின் பல்வேறு மதங்களிலும், நம்பிக்கைகளிலும், சாஸ்திரங்களிலும் 108 எனும் எண்ணுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படக் காரணம் இயற்கையின் படைப்புகளிலும் இன்னும் பல்வேறு வகைகளிலும் 108-க்கு முதன்மையான இடம் உண்டு. அவை என்னென்ன, எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

1. பூமியின் விட்டத்தை (குறுக்களவு) விடச் சூரியனின் விட்டம் 108 மடங்கு அதிகம்.

2. பூமிக்கும் சூரியனுக்குமிடையே உள்ள தூரம் சூரியனின் சுற்றளவைப் போல் 108 மடங்காகும்.

3. பூமிக்கும் சந்திரனுக்குமிடையே உள்ள சராசரித் தூரம் சந்திரனின் விட்டத்தைப் போன்று 108 மடங்காகும்
.
4. ஆயுர்வேதத்தின்படி 108 மர்மப் புள்ளிகள் பூவுலகில் வாழும் அனைத்துயிர்களுக்கும் இன்றிமையாத சக்தி மையங்களாகக் கூறப்பட்டுள்ளன.

5. சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பில் குறுக்குக்கோடுகள் 54 இடங்களில் கடந்து ஆணின் ஆண்மையையும், பெண்ணின் நளினத்தையும் காட்டும் 108 ஆக அமைந்துள்ளன.

6. பரத நாட்டியத்தின் கரணங்கள் (முத்திரைகள்) 108.

7. வட மொழியில் 54 எழுத்துக்கள் சிவ ஸ்வரூபமாகவும், 54 எழுத்துக்கள் சக்தி ஸ்வரூபமாகவும் கருதப்படுகின்றன. ஆக மொத்தம் நூற்றெட்டு.

8. இந்து தர்மத்தின் புராணங்கள் நூற்றெட்டு; உபநிஷத்துக்கள் நூற்றெட்டு.

9. நீண்ட காலமாகப் புனிதமானவையாகக் கருதப்படுகிற ஒன்பதையும் பன்னிரண்டையும் பெருக்கினால் வருவது நூற்றெட்டு. மேலும், 108-ஐ ஒவ்வோர் இலக்கமாகப் பிரித்தால், முதல் இலக்கமான ஒன்று எல்லோருக்கும் மேலான பரத்துவம் ஒன்று இருக்கிறது என்பதையும், 0 இந்து மதத்தில் பெரிதும் போற்றப்படும் நிலையான வெறுமை அல்லது பூரணத்தைக் குறிப்பதாகவும், 8 என்னும் எண் எல்லையற்றதும், நிரந்தரமானதுமான உண்மைத் தத்துவத்தைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகிறது. தவிர, இந்த மூன்று இலக்கங்களின் கூட்டுத்தொகை ஒன்பது. அதாவது 1+0+8=9.

10. 108 என்பது ‘ஹர்ஷத் எண்’ (வட மொழியில் பெருமகிழ்ச்சி என்று பொருள்படும்).

11. இருதயச் சக்கரங்கள் எனப்படுபவை ஆற்றலை வெளிப்படுத்தும் 108 நுண் குழல்களாகச் செயல்பட்டு இவற்றுள் சுஷும்னா எனப்படும் நாடி தலை உச்சியை அடைந்தால் தன்னைத் தானே உணரும் பேரானந்த நிலையை அடையலாம் எனக் கூறப்படுகிறது.

12. பிராணாயாமப் பயிற்சி செய்த ஒருவர் ஒரு நாளைக்கு நூற்றெட்டு மூச்சுக்கள் மாத்திரம் விடப் பயின்றால் அவர் தன்னைத் தானே உணர்ந்து கொள்ள இயலும் என்கிறது யோக சாஸ்திரம்.

13. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என ஒவ்வொன்றுக்கும் முப்பத்தாறு நினைவுகள் எனும் வகையில் மனித மனதில் உணர்வுகள் நூற்றெட்டு எனக் கூறப்படுகிறது.

14. பாகவதத்தில் கிருஷ்ணனை விரும்பும் கோபிகைகள் எண்ணிக்கை நூற்றெட்டு.

15. யோக சாஸ்திரத்தில், மனிதச் சிந்தனைகளைத் தீர்மானிக்கும் கோளாகக் கூறப்படுவது சந்திரன். வானவியல்படிச் சந்திரனின் பிரதிநிதியாகக் கருதப்படும் வெள்ளியின் அணு எடை எண் 108.

16. தியான முறைகள் மொத்தம் நூற்றெட்டு.

17. சீக்கிய மதத்திலும் நூற்றெட்டு முடிச்சுக்கள் கொண்ட ஜப மாலையைப் பயன்படுத்துவது வழக்கம்.

18. அக்ரூட் மரத்தில் நூற்றெட்டு புத்த முகங்களைச் செதுக்கி வைத்துக் கொள்வது அதிர்ஷ்டம் தருவதாக நம்பப்படுகிறது.

19. புத்த மதத்தின்படி, சிலர் புத்தாண்டின் தொடக்கத்தில் 108 முறை மணி அடிப்பது வழக்கம்.

20. நற்குணங்கள், தீய குணங்கள் எண்ணிக்கை தலா 108 என்பதும் ஒரு புத்த மத நம்பிக்கை.

21. சீன புத்தர்களும், தாவொயிஸ்டுகளும் கூட 108 மணிகளுடன் கூடிய சூ சூ (su-chu) என்னும் மணி மாலையை பயன்படுத்துகிறார்கள். அந்த மணிமாலை 36 மணிகள் கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இடையிடையில் ஒரு மணி கோக்கப்பட்டிருக்கும்.

22. சீன வானசாஸ்திரத்தின்படிப் புனிதமான நட்சத்திரங்கள் மொத்தம் 108.

23. ஆன்மா தன் பயணத்தில் கடக்க வேண்டிய பகுதிகளின் எண்ணிக்கை 108.

24. ஜப்பானில் ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் பழைய ஆண்டுக்கு விடைகொடுத்துப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒரு மணி 108 முறை ஒலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மணி ஓசையும் நிர்வாணம் என்னும் ஆனந்த நிலையை அடைவதற்குப் புவியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் 108 ஆசைகளைத் துறக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

மீண்டும் பெரிய திரைக்கு வருவேன் - இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா!

 தற்போது சின்னத் திரையில் சீரியல்கள் இயக்கிக் கொண்டிருப்பது தற்காலிக இடைவெளிதான். மீண்டும் பெரிய திரையில் அதிரடியாக களம் இறங்குவேன் என்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

இவரது திறமைக்கு சூப்பர் ஸ்டார் நடித்த பாட்ஷா, அண்ணாமலை, வீரா படங்களே போதும். தற்போது திரைப்படம் எதுவும் இயக்காமல் சின்னத் திரையில் தொடர்களை இயக்கி வருகிறார். சின்னத்திரை என்றாலும், நீங்கள் நினைப்பது போல் சுலபமான காரியம் இல்லை. சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. ஒரு இரண்டு மணி நேர சினிமாவை சுவரஸ்யமாக கொடுப்பது வேறு. ஆனால், தொடர்களில் ஒவ்வொரு வாரமும் ரசிக்கும்படி கொடுக்க வேண்டும். அதை தற்போது நிறைவாக செய்து வருகிறேன்.

தெலுங்கில் ஒரு பெரிய ஹீரோவை வைத்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. தெலுங்கானா பிரச்சனையால் அது கைவிடப்பட்டது. தற்போது விரைவில் ஒரு பிரம்மாண்டமான தழிழ் படத்தை இயக்கவிருக்கிறேன் என்கிறார்.


மலையாளத்தில் சூர்யாவா !

மலையாளம், ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் திரைப்படம் இயக்குபவர் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன்.

இவர் தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோ சூர்யாவை வைத்து படம் எடுக்க உள்ளார்.

இதுவரை இல்லாத அளவுக்கு சூர்யாவை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் படம் எடுக்க இருக்கிறார் இயக்குனர் ப்ரியதர்ஷன்.

சூர்யா தற்போது கமிட்டாகியிருக்கும் படங்களை எல்லாம் முடித்த பிறகு இப்படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கோலிவுட் ஹீரோக்களின் ஈசிஆர் மோகம்!

முன்பெல்லாம் சென்னை சிட்டிக்குள்தான் சினிமா நடிகர்-நடிகைகள்-டைரக்டர்களெல்லாம் வீடு வாங்கி செட்டிலாவார்கள். ஆனால் இப்போது வீடு வாங்க நினைக்கும் அனைவருமே சென்னையிலுள்ள ஈசிஆர் சாலை பகுதிக்குத்தான் செல்கிறார்கள். அதுவும் தங்கள் வீட்டில் நின்று பார்த்தால் கடல் தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அந்த வகையில், இளையராஜா, கமல், வைரமுத்து, விஜய், அஜீத், சூர்யா என பல முன்னணியினர் இப்போது ஈசிஆர் சாலையில்தான் பிரமாண்டமான மாளிகை கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரஜினி மட்டும்தான் இன்னும் போயஸ் கார்டன் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் புதிதாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களுக்கும், சில படங்களில் நடித்து சம்பாதித்ததுமே ஈசிஆரில் வீடு கட்டி விடவேண்டும் என்பதுதான முதல் கனவாக உள்ளது. அந்த வகையில், தற்போது சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்த பரத்தும் அந்த ஏரியாவில் வீடு வாங்க இடம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து விஜயசேதுபதியும் ஒரு வெள்ளை மாளிகை கட்ட தீவிரமாக இடம் பார்த்து வருகிறாராம்.

இப்படி முன்னணியினரும், வளர்ந்து வருபவர்களும் ஈசிஆருக்கு ஓடிக்கொண்டிருபபதால், இப்போது ஈசிஆர் சாலையில் வீடு கட்டினால்தான நடிகர்களுக்கு மரியாதை என்கிற நிலை கோடம்பாக்கத்தில் ஏற்பட்டிருப்பதால், அடுத்தபடியாக தனுஷ், சிவகார்த்திகேயன்,அனிருத் போன்ற மூவர் கூட்டணியும் விரைவில் ஈசிஆருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம்.

வார்த்தை பஞ்சமா? கற்பனை வறட்சியா? பெருகி வரும் ஏடாகூட தலைப்புகள்!!

"சினிமாவுக்கு தலைப்பு வைப்பது குழந்தைக்கு பெயர் வைக்கிற மாதிரி" என்பார் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். "படத்தின் தலைப்பே பாதி கதை சொல்ல வேண்டும்" என்பார் அடூர் கோபால கிருஷ்ணன், "தலைப்புக்குள் கதை இருக்க வேண்டும்" என்பார் கே.பாலச்சந்தர். ஆனால் இன்றைக்கு வருகிற தலைப்புகளை பார்க்கும்போது கூவத்தின் கரையில் செல்லும்போது மூக்கை பொத்திக் கொள்வதைப்போல, கேட்கும்போதே காதை பொத்திக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.

படிக்காத மேதை, பாவை விளக்கு, படித்தால் மட்டும் போதுமா, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண், நாடோடி மன்னன், ஒரு கைதியின் டயரி, கடல் மீன்கள், நெற்றிக்கண், அபூர்வ ராகங்கள், தப்புதாளங்கள், அன்புக்கு நான் அடிமை... இப்படி தலைப்புகளே கதை சொன்ன காலம் ஒன்று இருந்தது. இந்த தலைப்புகள் அந்தந்த படங்களை கவுரப்படுத்தியது. கதைக்கேற்ற நல்ல தலைப்பு அமையாவிட்டால் பேசாமல் படத்தின் ஹீரோ, அல்லது ஹீரோயின் கேரக்டர் பெயரையே தலைப்பாக வைத்து விடுவார்கள். எப்படி இருந்தாலும் தலைப்பில் ஒரு கண்ணியம் இருந்தது. ஆனால் இன்றைக்கு வைக்கப்படும் தலைப்புகளில் கண்ணியமும் இல்லை, கவுரவமும் இல்லை.

வாரணம் ஆயிரம், நீதானே என் பொன்வசந்தம் என்று தன் படங்களுக்கு அழகான தமிழ் பெயர்களை வைத்த கவுதம் மேனன், நடுநிசி நாய்கள் என்ற தலைப்பையும் வைத்தார். கே.பாலச்சந்தருக்கு பிறகு தலைப்பில் கவனமும் கண்ணியமும் காக்கிறவர்கள் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட சிலர்தான். இவர்களின் தலைப்புகளில் கனம் இருக்கும், கதை இருக்கும்.

நானே ஒரு டுபாக்கூடர் எனக்கிட்டேவா, மண்ணாங்கட்டி பயலுக, பித்தேரி, தீத்துக்கட்டு, பட்ற,
தருதல, குபீர்,

நம்புங்க இதெல்லாம் இப்போது தயாரிப்பில் இருக்கிற சில படங்களோட தலைப்புகள். 3லட்சம் வார்த்தைகள் கொண்ட தமிழ் மொழியில் எப்படியெல்லாம் தலைப்பு வைத்திருக்கிறார்கள் பாருங்கள். ஒருவேளை இந்த தலைப்புகளுக்கும், இவர்கள் எடுக்கிற கதைக்கும் சம்பந்தம் இருப்பதாக வைத்துக் கொண்டால் அந்த கதையும், காட்சிகளும் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. தமிழில் வார்த்தைக்கு பஞ்சமில்லை. இயக்குனர்களின் கற்பனை வறட்சியே இதற்கு காரணம்.

எதையாவது ஏடாகூடமாக செய்து மக்கள் கவனத்தை படத்தின் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக இப்படி தலைப்புகள் வைப்பதாக கூறப்படுகிறது. அதற்கு வேறு ஏதாவது நல்ல வழிகளை தேட வேண்டியதுதானே. தன் பிள்ளைகள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எருமை, கழுதை, தண்டம்னு யாராவது பெயர் வைப்பார்களா?
தயாரிப்பில் இருக்கும் இன்னும் சில தலைப்புகளை பாருங்கள்...

பட்டைய கிளப்பணும் பாண்டியா

ஆடாம ஜெயிச்சோமடா

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்

நாங்கெல்லாம் ஏடாகூடம்

நாங்கெல்லாம் அப்பவே அப்படி

நீ என்ன பெரிய அப்பாடக்கரா

கள்ளபடம்

சுட்ட படம்

ஆயா வடை சுட்ட கதை

சேர்ந்து போலாமா

தலைகால் புரியல

காயலான்கடை கந்தன்

எவ்வளவோ பார்த்தாச்சு

மங்குனி பாண்டியர்கள்

ஆறுமுகம் காதலிக்கிறான்

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்

நட்பு காப்புக் குழு

கிடாரி பூசாரி மகுடி

நேரா போய் நேரா வா

பதினேழு ஜி.பி

8 எம் எம்

எண்றதுக்குள்ள

அழகர் களத்துல இறங்கிட்டாரு

இவை சின்ன பட்டியல்தான் இதை விட இன்னும் நிறைய இருக்கிறது.

அன்பார்ந்த வாசகர்களே... கற்பனை வறண்டு, கடும் தலைப்பு பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமாவுக்கு உங்கள் கற்பனையில் தோன்றும் அழகான தலைப்புகளை கமெண்டுல போடுங்க வேணுங்கறவங்க எடுத்துக்கட்டும்.

வாழ்க்கையை எளிதாக்கும் சின்ன, சின்ன டிப்ஸ்…!

* அவசரத் தேவைக்கு போலீஸ், தீயணைப்பு மற்றும் அருகில்  உள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

* செல்போனில்தான் எல்லாருடைய எண்ணும் உள்ளதே என்று எண்ணாமல், உங்கள் கணவர், நெருங்கிய உறவினர் அல்லது நண்பர், அண்டை வீட்டுக்காரரின் தொலைபேசி எண்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

* எதேனும் பொருள் விற்க என்றோ அல்லது நன்கொடை வசூலிக்க என்றோ வீட்டுக்கு வரும் முன், பின் அறிமுகம் இல்லாத நபர்களை உடனடியாக வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

* வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அதிக உயரத்தில் இருந்து பொருள்களை எடுப்பது போன்ற ஆபத்து நிறைந்த வேலைகளைத் தவிர்த்துவிடுங்கள்.

* கேஸ் சிலிண்டர் தீர்ந்து போனால் புதிய சிலிண்டர் மாற்றுவது,கேன் தண்ணீர் தீர்ந்து போனால் மாற்றுவது, “பல்ப்’ மாட்டுவது போன்ற சிறிய வேலைகளை நீங்களாகவே செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

* கேஸ் சிலிண்டர் கொண்டு வரும் நபர், மின்சாரம் மற்றும் தொலைபேசி பணியாளர்கள் வீட்டுக்கு வந்தால், அவர்களின் பணி குறித்த அடையாளங்களை உறுதிப்படுத்திய பின் வீட்டுக்குள் அனுமதியுங்கள்.

நல்ல நண்பன் 100 உறவினர்களுக்குச் சமம்..!

இரண்டு நண்பர்கள் வியாபாரம் சம்பந்தமாக ஒரு பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர், கடுமையான வெயிலின் காரணமாக இருவருக்கும் மிகுந்த தாகம் ஏற்பட்ட்து, அதே வழியில் இருவரும் ஒரு தண்ணீர் ஊற்றை கண்டு ஆவலுடன் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு தண்ணீர் குடிப்பதில் தகறாரு ஏற்பட, ஒருவர் தன்னுடைய நண்பனை அடித்துவிடுகின்றார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த நண்பர், அந்த பாலைவன மணலில் ஏதோ எழுதிவிட்டு, அந்த இட்த்தை விட்டு நகர்கின்றார், அதை கண்ட பின் தொடர்ந்து வந்த அவரது நண்பர், என்ன எழுதினான் என்று பார்க்கையில் “என் நண்பன் என்னை கன்னத்தில் அறைந்துவிட்டான்” என்ற வார்தையைப் பார்கின்றார்.

ஒருவருக்கொருவர் பேசாமலேயே, மீண்டும் பயணத்தை தொடர்கின்றார்கள்

சற்றும் எதிபாரத நேரத்தில், அடி வாங்கிய நண்பர் ஒரு புதைகுழியில் மாட்ட, கன்னத்தில் அறைந்த நண்பனோ, தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய நண்பனை காப்பாற்றுகின்றார். இந்த சம்பவம் நடந்த பின்பு, ஒரு பாறையில், புதைகுழியில் விழுந்த அந்த நண்பன் மீண்டும் ஏதோ எழுதுவதைக் கண்ட அவருடைய நண்பர், அருகில் வந்து பார்த்தார் “என் நண்பர் என் உயிரைக் காப்பாற்றினான்” என்று எழுதியிருந்த்தைக் கண்டு, அவரிட்ம் வினவினார்.

நான் உன்னை அடித்ததை மணலில் எழுதிவிட்டு, உயிரைக் காப்பாற்றியதை மட்டும் பாறையில் ஏன் எழுதினாய்?

”என்ன இருந்தாலும் நீ என் நண்பன், ஏதோ ஒரு கோபத்தில் அடித்துவிட்டாய், அது நான் பாலைவனத்தில் எழுதிய எழுத்து போல, கொஞ்ச நேரத்தில் என் மனதில் இருந்துவிட்டு மறைந்துவிட வேண்டும் என்றும், என் உயிரைக் காப்பாற்றியதை நான் என் வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சில், இந்த பாறையில் எழுதிய எழுத்து போல மறையாமல் இருக்க வேண்டும் என்றும் அப்படி செய்தேன்