Thursday, May 29, 2014

சித்த வைத்திய சிகாமணி MBBS! - 'கல்யாணத்துக்குப் பிறகு தாம்பத்தியத்தில் தடுமாற்றமா..?

                  'கல்யாணத்துக்குப் பிறகு தாம்பத்தியத்தில் தடுமாற்றமா..? என்கிட்ட வாங்க!’னு ஊர்ல இருக்கும் வாலிப-வயோதிகர்களுக்கு அழைப்பு விடுக்கும் நம்ம ஹீரோவுக்கே, கல்யாணத்துக்குப் பொண்ணு கிடைக்கலை. அதுவும்... பரம்பரை பரம்பரையா, பாரம்பரிய வழியில் இளைஞர்களின் மன, உடல் குறைகளைத் தீர்த்துவெச்ச குடும்பத்தோட அஞ்சாவது தலைமுறை இளைஞனுக்கு (ஹீரோ), கல்யாணம் பண்ணிக்கிறதுல சிக்கல். ஹீரோ அதை எப்படிச் சமாளிக்கிறார்..? இதுதான் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ படம்!'' - ஒரு வரியில் நம் ஆர்வத்தைத் தன் பக்கம் திருப்புகிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர்.

 ''பாரம்பரியச் சித்த வைத்தியம் தமிழ்நாட்டுல எவ்வளவு பெரிய நெட்வொர்க். அதை வெச்சு காமெடி பண்ணிட முடியுமா?''

''அட, கதையை முழுசாக் கேட்டுட்டு முடிவு பண்ணுங்க. ஒளிச்சு மறைச்சு எந்த ரகசியமும் கதையில இல்லை. க்ளைமாக்ஸ் வரைக்கும்கூட இப்பவே முழுக் கதையையும் சொல்றேன். பொண்ணு கிடைக்காத வெறுப்புல இருக்கும் ஹீரோ பரத், ஹீரோயின் நந்திதாவைப் பார்த்ததும் காதலில் விழுறார். அதனால, நந்திதா போற இடம் எல்லாம் ஃபாலோ பண்ணிட்டே இருக்கார். 'இவன் நம்மளைக் கடத்த வர்றான் போல’னு தப்பாப் புரிஞ்சுக்கிட்ட நந்திதா, அவங்க அப்பா, தம்பி ராமையாகிட்ட சொல்றாங்க.

கொம்புச் சண்டை மாஸ்டர் தம்பி ராமையா, தன் சிஷ்யர்களோட போய், பரத்தைக் கட்டிவெச்சு வெளுக்கிறார். அப்போ பரத் மொபைலுக்கு வர்ற ஒரு அழைப்பு, 'மருந்து தீர்ந்துடுச்சு. அடுத்து எப்போ மருந்து கொடுப்பீங்க?’னு ஸ்பீக்கர் போன்ல அலற, 'ஐயோ..! தம்பி நீங்க எம்.பி.பி.எஸ். டாக்டரா? இது தெரியாம உங்களை அடிச்சிட்டேனே!’னு தம்பி ராமையா பதற, அடி, உதைல இருந்து தப்பிக்க, 'ஆமாங்க... இவன் டாக்டர்தான்’னு பரத் ஃப்ரெண்ட் கருணா உளற... அடிச்ச கையாலயே பரத்துக்குக் கை-கால் அமுக்கிவிட்டு, 'எம்.பி.பி.எஸ். டாக்டரே மாப்பிளையா அமையுறது வரமாச்சே!’னு ஃபீலிங்ஸ் ஆரம்பிச்சிடுவார் ராமையா.

'நான் எம்.பி.பி.எஸ். டாக்டர் இல்லை. சித்த வைத்தியர்’னு பரத் உண்மையைச் சொன்னா, கல்யாணம் நடக்காது. ஆனா, அதுக்காக நந்திதா மேல இருக்கிற காதலைவிட முடியாது. அப்புறம் ஆரம்பிக்கும் பாருங்க... காமெடி ரைடு. வயித்து வலிக்கு டாக்டரைத் தேடுவீங்க!''

''எப்பவோ ஒரு காமெடி படம்னா சிரிக்கலாம்... எப்பப் பார்த்தாலும் காமெடி படம்னா..?''

''இது சும்மா உங்களைச் சிரிக்க வைக்கணும்கிற அச்சுபிச்சு காமெடி இல்லை. கதை, காட்சி, வசனத்தோட பின்னிப் பிணைஞ்ச காமெடி.

ஸ்கிரிப்ட் பார்த்த கே.பி. சார், 'இதுல எந்த ஆர்ட்டிஸ்ட் நடிச்சாலும் படம் ஹிட். யாரை வேணும்னாலும் ஃபிக்ஸ் பண்ணுங்க. ஷூட்டிங் ஆரம்பிச்சுடலாம்’னு சொன்னார்.

பரத், நந்திதா தவிர, தம்பி ராமையா, கருணாகரன், மனோபாலா, மயில்சாமி, இமான் உள்ளிட்ட 21 காமெடி நடிகர்கள் நடிக்கிறாங்க. ஆனா, யாரும் படத்துல தனியாத் தெரிய மாட்டாங்க.

பெங்களூருல இருந்து ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ்...னு தமிழுக்கு அறிமுகப்படுத்தின கே.பி சார், இந்தப் படத்துல கோமல் குமாரை அறிமுகப்படுத்துறார். கன்னடத்துல நம்பர் ஒன் காமெடி ஆர்ட்டிஸ்ட் அவர். 'சந்திரமுகி’ கன்னட வெர்ஷன்ல வடிவேலு கேரக்டர் பண்ணவர். அங்க 99 படங்கள் முடிச்சிட்டு, 100-வது படம் தமிழ்ல பண்றார்.

எங்களோட ஆர்வம், டீம் எல்லாத்தையும் பார்த்துட்டு, 'ஸ்கிரிப்ட்ல உள்ளதை உள்ளபடி எடுத்துட்டு வந்துடுங்க. கண்டிப்பா ஹிட்’னு ஆசீர்வாதம் பண்ணியிருக்கார் கே.பி. சார்.

அந்த ஆசீர்வாதமே எங்களுக்குப் பெரிய வரம்!''

0 comments:

Post a Comment