Sunday, December 29, 2013

குழந்தைகளுக்கு தண்டனைகள் நற்பயன் தருவதில்லை...



பெற்றோர்கள் குழந்தைகளின் உள் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். வேண்டாத நடவடிக்கைகளுக்காக குழந்தைகள் மீது பழி சுமத்த வேண்டாம். இதற்காக மனமொடிந்து இருக்கவும் வேண்டாம். எவ்வளவு திட்டினாலும், தண்டனை தந்தாலும் முன் எச்சரிக்கை செய்தாலும், எதிர்மறை குறிப்புகளாலும், குழந்தைக்கு எந்தவித பயனும் உதவியும் இல்லை.

எப்பொழுதெல்லாம் குழந்தைகள் (ஏமாற்றம், கோபம் அல்லது எதிர்பார்த்தது நடக்காவிடில்) போன்ற உணர்வுகளால் தாக்கப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள் உடனே அழுவார்கள். பொருட்களை கோபத்துடன் உடைப்பார்கள்; தரையில் விழுந்து புரளுவார்கள்; உதைப்பதோ அல்லது முட்டுவதோ, மூச்சைப் பிடித்து கத்துவதோ செய்வார்கள். இத்தகைய நடத்தைகள் நடக்க விடக்கூடாது. இதற்காக ஊக்கமளித்தலும் கூடாது. பெற்றோர் குழந்தையின் சில செயல்களைத் தடுத்தால், அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதையும் விளக்க வேண்டும்.

 தவறான வழியில் செல்லும் குழந்தையைத் தடுத்து, சரி செய்ய வேண்டும். இல்லாவிடில் அவர்களது கோபமூட்டும் நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால், பின்னாளில் அவன் வளர்ந்து மிகுந்த கோபக்காரனாகவும், அகந்தையுள்ளம் உள்ள குழந்தையாகவும் மாற வாய்ப்புள்ளது. இதுவே பின்னர் கல்லூரி நாட்களில் இவன் ஒரு அகந்தையானவனாக மாறி விடுவான். அதன் பின்னர் தாம் பணிபுரியும் இடத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும். இதனை ஜான் டி குரூஸ் என்னும் உளவியல் நிபுணர் கூறுகிறார்

. தாத்தா பாட்டியுடன் வாழும் குழந்தைகள் பல நேரங்களில் செல்லத்தினால் மிகவும் கோபம் அடைவார்கள். ஏனெனில் இப்பெரியவர்கள் தங்கள் பேரக் குழந்தைகள் மீது அளவில்லாத அன்பை பொழிந்து குழந்தைகளை கெடுத்து விடுகிறார்கள். ஆனால் பெற்றோர் சில சந்தர்ப்பங்களில் சில எல்லைக்குள் சுதந்திரம் தந்து குழந்தைகளை நடத்துவார்கள். சில நேரங்களில் சந்தர்ப்பமே கொடுக்காது நடத்துவார்கள்.

வளரும் குழந்தைகள் அடிக்கடி கோபப்படும் நடத்தைகளில் ஈடுபடுவது என்பது ஒரு சாதாரண விஷயம்தான். இந்நிலையில், ஓர் அன்பானவனின் நடத்தைகள் தீர்மானமான அணுகுமுறை ஆகியவற்றால் நல்லபடியாக வளரும் நிலை அமைய வாய்ப்புண்டு. கட்டுப்படுத்தாத பெரிய இடைவெளி ஏற்பட்டால் அவனது நடத்தைகளில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

தண்டனை என்பது ஒரு பரிகாரமானது. சில பெற்றோர் தண்டனை தொடர்பான ஏதாவது விஷயங்கள் தேவை என நினைக்கின்றனர். குழந்தைகளை அடிக்கடி அடிக்கும் பழக்கம் நல்லதன்று. இது அவர்களை முழுதான ஆளுமையோடு வளரச் செய்யாது. அவர்கள் உடல் மன வளர்ச்சி குன்றிவிடும்

. சில பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்கவும், காதுகளை இழுத்துத் திருகி தப்பான வழிமுறைகளை கையாளுவார்கள். இத்தகைய குழந்தைகள் பிற்காலத்தில் சில தவிர்க்க முடியாத பிரச்சினைகளோடு வாழ்வார்கள். அவர்கள் வீட்டிற்கும், மனித சமூதாயத்திற்கும் மதிப்புக் கொடுக்க மாட்டார்கள். இன்னும் சில பெற்றோர்கள் கையில் குச்சியுடன் தன் குழந்தைகளை அடிக்கத் தயாராக இருப்பார்கள்.


 குழந்தைகளை வெயிலில் நிற்க வைப்பார்கள். சென்ற நூற்றாண்டில், வகுப்பறையில் மாணவர்கள் பெஞ்சின் மீது நிற்க வைத்து தண்டனை கொடுக்கும் பழக்கம் இருந்தது. பெற்றோர்கள் பல அன்றாட நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரும்

. விலைவாசி உயர்வு, வருமானம் பற்றாக்குறை, நிதி நெருக்கடி, கடின அலுவலகப் பணி முதலிய பிரச்சினைகளை பெற்றோர் சந்திக்க வேண்டியிருக்கும். இது குழந்தைகள் மீது திணிக்கப்படக்கூடாது. பெற்றோர், எப்போதும் அவர்கள் உணர்ச்சிவசப்படாது பார்த்துக்கொள்வது நல்லது. சிறு குழந்தைகள் மீது இளம் பெற்றோர் காட்டும் கவனம் இதை மறைத்துவிடும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பைரன் என்ற உளவியல் வல்லுனர் இவ்வாறு கூறுகிறார். ஊமைக்காய உணர்வோடு வளரும் குழந்தைகள் பின்னாளில் நன்கு வளரா ஆளுமையோடு இருப்பார்கள். இதற்குக் காரணம் திரும்பத் திரும்ப உதாசீனப்படுத்துதல் ஆகியவற்றால் அவர்கள் தங்களைப் பற்றிக் குறைவான மதிப்பீட்டையும், தாங்கள் எதற்கும் பயன்படாதவர்கள் என்ற எண்ணமும் ஏற்படலாம். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தண்டிப்பதற்கு முன் பலமுறை சிந்தித்துத்தான் செயலாற்ற வேண்டும்.

இன்றைய குழந்தைகள்தான் நம் நாட்டின் நாளைய குடிமகன்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஐரோப்பிய நாடுகளில் மாணவர் மீது அடிபட்டால் அது ஒரு குற்றவியல் சார்ந்த செயலாகவே எண்ணுகிறார்கள். வீட்டில் தண்டனை மற்றும் பள்ளியில் தண்டனையெல்லாம் தற்போது மறைந்த, தீய கனவு ஆகிவிட்டது. குழந்தைகள் தவறு செய்ய நேர்ந்தால், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். ஆனால் தண்டனை மட்டும் கொடுக்காதீர்கள். குழந்தைகளை சிந்திக்க அனுமதியுங்கள். அவர்களுக்கும் மூளை இருக்கிறது.

0 comments:

Post a Comment