Monday, December 16, 2013

ரஜினிகாந்த் பிறந்த நாள் போஸ்டர் மூலம் மத மோதல்? – சி. எம். செல்லுக்கு போன புகார்!




தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் விசுவ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் “12–ந் தேதியன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் சென்னையில் பல இடங்களில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர். அதில், ஒரு போஸ்டரில் உள்ள படத்தில், ரஜினிகாந்த் அவரது மனைவி, மகளுடன் வாக்குச்சாவடியில் ஓட்டுபோடுவது போலவும், ஓட்டு போடுவதற்கு நிற்கும் ரசிகர் வரிசையில் விநாயகர், விஷ்ணு கடவுள்களும் காத்து நிற்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.


இந்து மத தெய்வங்களை அரசியலுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியுள்ளனர். இந்து மதத்தை பின்பற்றுகிறவர்களின் மனதை, தமிழகம் முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் புண்படச் செய்துள்ளது. இந்த போஸ்டரை அச்சடித்தவர், ஒட்டியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அதில் ஐந்து பேரின் பெயர்கள் உள்ளன.


ரஜினி ரசிகர் போர்வையில் மாற்று மதத்தினர் இதன் பின்னணியில் உள்ளதுபோல் தெரிகிறது. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் மாநாட்டில் கூறியுள்ளதுபோல், மத மோதலைத் தூண்டும் வகையில் செயல்படுபவர்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment