Friday, May 30, 2014

லிங்காவுக்கு அடுத்து ஷங்கர் படம்... ரஜினி முடிவு!

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது லிங்கா படம் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

லிங்காவுக்கு அடுத்து ஷங்கர் படம்... ரஜினி முடிவு!

நான்கு நாயகிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா மற்றும் லாரன் இர்வின் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் ரஜினி ஜோடிகளாக நடிக்கின்றனர். நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

இந்தப் படம் கடந்த மே 2-ம் தேதி மைசூரில் தொடங்கியது. தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து நடித்து வருகிறார் ரஜினி. யாருக்கும் அனுமதி கிடைக்காத மைசூர் அரண்மனையில் ரஜினியின் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்குகிறது. அங்கு மீதிப்படத்தை முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்பும் ரஜினி, ஷங்கருடன் கதை விவாதத்தில் ஈடுபடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஷங்கர் தனது ஐ படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். ஒரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கியாம். ஜூன் இறுதி அல்லது ஜூலையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். படத்தை வெளியிட்ட கையோடு, சில தினங்கள் ஓய்வெடுத்த பிறகு, ரஜினியின் படத்துக்காக களமிறங்கப் போகிறாராம் ஷங்கர்.

முன்பெல்லாம் மூன்றாண்டுகளுக்கொரு படம் என்ற கொள்கை வைத்திருந்த சூப்பர் ஸ்டார், இந்த ஆண்டே மூன்று படங்களில் நடிப்பது, ரசிகர்களுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சிதானே!

0 comments:

Post a Comment