Thursday, October 3, 2013

முயற்சி இனிமை பயக்கும்...(நீதிக்கதை)



 
கோபி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வரும் இளைஞன்.
 


அவன் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எங்கும் வேலை கிடைக்கவில்லை...அதனால் மனம் சோர்ந்தான்.


வருத்தத்துடன் காணப்பட்ட அவனை அவன் தந்தை அழைத்துக் காரணம் கேட்க அவனும் சொன்னான்.


உடனே அவன் தந்தை பக்கத்திலிருந்த ஒரு ஆப்பிள் பழத்தை அவனிடம் கொடுத்து ...அதை கத்தியால் வெட்டச்சொன்னார்.


அவனும் அப்படியே செய்தான்.


இரண்டாகப் பிளந்த ஆப்பிளைக்காட்டி ..'இதனுள் எவ்வளவு விதைகள் இருக்கிறது பார்..' என்றார்.


'நான்கைந்து விதைகள் இருக்கும்' என்றான். கோபி.


'இந்த விதைகளில் ஒன்றோ....அல்லது பலவோ வேறு ஆப்பிள் மரங்கள் உருவாகக் காரணமாய் இருக்கப் போகின்றன....அல்லது எல்லா


விதைகளும் நம்மால் தூக்கி எறியப்படப் போகின்றன.ஆனாலும்.. ஒவ்வொரு ஆப்பிளுக்குள்ளும் விதைகள் உருவாகிக் கொண்டுதானே இருக்கின்றன.


பல வீணாகிப் போனாலும் ஏதேனும் ஒன்று ஆப்பிள் மரமாக ஆகத்தானே போகிறது.அதுபோலத்தான் நம் முயற்சிகளும்...


வெற்றி கிடைக்காததால் ....அது பெரிய தோல்வியாக எண்ணாமல் ..அடுத்த முயற்சியில் ஈடுபடு...அப்போது என்றேனும் வெற்றி உனக்கு கிட்டும்'


என்றார் கோபியின் தந்தை.


கோபியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.


இதையே வள்ளுவர்


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை


இன்மை புகுத்தி விடும் ...  என்றார்.
 

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை.முயற்சியே சிறந்த செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும் என்பது பொருள்.
 
 

0 comments:

Post a Comment