Tuesday, September 10, 2013

அச்சச்சோ!



300 வருடங்கள் பழைமையான பேலஸ், 200 ஏக்கர் நிலங்கள், விமான நிலையம், 3 விமானங்கள், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 18 கார்கள், 1,000 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள், வங்கி இருப்புப் பணம் என மொத்த சொத்தின் இன்றைய மதிப்பு 20,000 கோடி.

ஆம். பிரிட்டீஷ் இந்தியாவின் செல்வச் செழிப்பான சீக்கிய மஹாராஜா ஹரிந்தர் சிங் பிரார். இவருக்குச் சொந்தமான சொத்துக்களின் பட்டியல்தான் மேலே உள்ளவை. பஞ்சாபிலுள்ள ஃபரித்கோட்டை ஆட்சி செய்தவர் இவர். ஹரிந்தர் சிங்கிற்கு மொத்தம் 3 மகள்கள், ஒரு மகன்.

1981-இல் ஹரிந்தர்சிங் பிரார் தன் ஒரே மகனை சாலை விபத்தில் பறிகொடுத்தார். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த மஹாராஜா தன் சொத்துக்களை நிர்வகிக்க ஓர் அறக்கட்டளையை நிறுவினார். அதில் அவரின் பணியாட்கள், அலுவலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

1989-இல் மஹாராஜா மரணமடைந்ததும் அவர் எழுதிய உயில் வெளிச்சத்திற்கு வந்தது. அதில் மூத்த மகள் அம்ரித் கவுர்  அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்டதால் மஹாராஜா அவருக்கு சொத்துக்கள் ஏதும் தர விரும்பவில்லை. மேலும் அறக்கட்டளையின் சொத்துக்கள் பொதுச்சொத்தாக இருக்கும் என மஹாராஜா எழுதியதாக உயில் இருந்தது.

இதை எதிர்த்து 1992-இல் நீதிமன்றம் சென்றார் மூத்த மகள் அம்ரித் கவுர். ‘என் அப்பா ஒருபோதும் இப்படிப்பட்ட உயிலை எழுதவில்லை என்றும் என்னை அவர் புறக்கணிக்கவில்லை, அவரின் இறப்புவரை நான் உடனிருந்தேன்’என தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார். 21 வருடங்களாக நடைபெற்றுவந்த வழக்கில் தற்போது  தீர்ப்பளித்திருக்கிறது சண்டிகர் நீதிமன்றம்.

‘மஹாராஜா எழுதியதாக சொல்லப்படும் உயில் போலியானது, திருத்தப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகளின் திட்டமிட்ட சதி இது. எனவே மனைவியும் இளைய மகளும் தற்போது இறந்து விட்டதால் அறக்கட்டளையின் வசம் இருக்கும்  அவரின் சொத்துக்கள் யாவும் உயிரோடு இருக்கும் 2 மகள்களுக்கே சேரும்’ என்றது அந்தத் தீர்ப்பு.

21 வருடங்களாக நடைபெற்றுவந்த வழக்கில் நாங்கள் ஜெயித்திருக்கிறோம். எனது தந்தை ஏமாற்றப்பட்டிருக்கிறார். எனவேதான் இந்த வழக்கில் நான் போராட வேண்டியது அவசியமானதாக இருந்தது. இது  வெறும் பணம் என்பது மட்டுமல்ல, மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் நோக்கம்.

வழக்கைத் தொடர்ந்தபோதே கடைசி வரை நான் போராடத் தயாராக இருந்தேன். எனது அப்பாவின்  சொத்துக்களுள் ஒன்றான நான் பிறந்து வளர்ந்த இடத்திற்குச் செல்லக்கூட நான் அனுமதிக்கப்படவில்லை"என்கிறார், வழக்கைத் தொடர்ந்த மூத்த மகளான அம்ரித் கவுர். இவர் தற்போது சண்டிகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இதில் குறிப்பிடத்தக்க  விஷயம் 2001-இல் இறந்து போன மஹாராஜாவின் இளைய மகள் மஹிபிந்தர் சிங் கடைசிவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. தன்வாழ் நாளின் கடைசி 12 ஆண்டுகள் மிகவும் வறுமையில் வாடினார்.  நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தவர் கடைசியில் இவர் இறந்து 12 வருடங்களுக்குப் பிறகே தீர்ப்பளிக்கபட்டிருக்கிறது.

ஃபரித்கோட்டின் இளைய இளவரசி இன்று உயிரோடு இருந்திருந்தால் 20,000 கோடிக்கு அதிபதி அவர்

0 comments:

Post a Comment